msgbartop
msgbarbottom

28 Feb 10 வறுமை

காலங்கள் மாறுகிறது

கடமைகளும் மாறுகிறது. – ஆனால்

வறுமை மட்டும்  மாறவில்லை.

சட்டங்கள் மாற்றமாகிறது

திட்டங்கள்  வகுக்கப்படுகிறது

வறுமை மட்டும்  தீர்க்கப்படவில்லை!

வானமழுதால்

வெள்ளம் புரளும்  அந்த

புறம்போக்கு நிலம்.

சட்டிச் சோற்றுக்காய்

வற்றிய வயிறுகள்

வாழுகின்ற இல்லம்.

கந்தையும் கிழிசலும்

அவர்களது  உடை.

ஒட்டிய வயிற்றுடன்…..

பார்க்க நெஞ்சு குமுறுகிறது.

அவர்கள் உடம்புபடும்பாட்டை!

பாவங்கள்  நீங்க

புண்ணீயம் தேடி செல்கிறான் காசி -ஆனால்

ஏழைகளுக்கு  உதவினால் பாவம் தீராதா..

நீ யோசி!!!

- வெ.யுவராஜ்

12 Feb 10 காதல்

அன்பே உன்னை வர்ணிக்க கம்பன் கவிதை வரிகளை தேடினேன் கிடைக்கவில்லை.

கண்ணதாசனிடம் சென்றேன் அவரும் மறுத்துவிட்டார்  !

பின்னர்தான் தெறிந்தது  அவர்களே

உன்னை வர்ணிக்க வார்த்தைகளை அகராதியில் புரட்டிக்கொண்டு இருக்கின்றனர் என்று.

03 Feb 10 வைரமுத்து கவிதைகள்

1. சங்க காலம்
ஆற்றுத் தூநீர் ஆரல் உண்டு
குருகு பறக்கும் தீம்புனல் நாடன்
கற்றை நிலவு காயும் காட்டிடை
என்கை பற்றி இலங்குவளை ஞெகிழ்த்து
மேனி வியர்ப்ப மெல்லிடை ஒடித்து
வாட்கண் மயங்க உண்டதை மீண்டும்
பசலை உண்ணும் பாராய் தோழி

2. காவிய காலம்
பொன்னங் கொடியென்பார் போதலரும் பூவென்பார்
மின்னல் மிடைந்த இடையென்பார் – இன்னும்
கரும்பிருக்கும் கூந்தல் சுடர்த்தொடிஉன் சொல்லில்
கரும்பிருக்கும் என்பார் கவி.

3. சமய காலம்
வெண்ணிலவால் பொங்குதியோ
விரக்தியால் பொங்குதியோ
பெண்ணொருத்தி நான்விடுக்கும்
பெருமூச்சாற் பொங்குதியோ பண்ணளந்த மால்வண்ணன் பள்ளிகொண்ட பான்மையினால்
விண்ணளந்து பொங்குதியோ
விளம்பாய் பாற்கடலே!

4. சிற்றிலக்கியக் காலம்
தூக்கி நிறுத்திவைத்த கொண்டையாள் – மனம்
துள்ளி ஓடும்விழிக் கெண்டையாள் – நெஞ்சைத்
தாக்கி மறுநொடியில் தவிடுபொடியாக்கும்
சண்டையாள் – வெள்ளித் தண்டையாள்
முலை அதிரும்படி மணி உதிரும்படி
மனம் பதறும்படிஆடும் பாவையாள் – வில்
மாரன் பகைமுடிக்கத் தேவையாள்

5. தேசிய காலம்
சின்னஞ் சிறுகமலப் பூவினாள் – என்
சித்தத்திலே வந்து மேவினாள்
கண்ணில் ஜோதிஒன்று காட்டினாள் – என்
கவியில் காதல்ரசம்
விண்ணில் நிலவெரியும் வேளையில் – பொன்
வீணை கரம்கொண்டு மீட்டினாள்
மண்ணில் விண்ணகம் காட்டியே – அவள்
மறைந்தகதை எங்கு சொல்குவேன்?

6 .திராவிட காலம் – 1
இல்லாத கடவுள் போன்ற
இடைகொண்ட பெண்ணே உந்தன்
பொல்லாத அழகு பாடப்
பூவாடும் கூந்தல் பாட
சல்லாப விழிகள் பாடத்
தனித்தமிழ் கொண்டு வந்தேன்
நில்லாமற் போனால் கூட்டில்
நிற்குமோ எந்தன் ஆவி?

7. திராவிட காலம் -2
விண் – அப்பம் போன்ற நிலவுவந்து – காதல்
விண்ணப்பம் எழுதுகின்ற இரவு
முத்தமென்ற சொல்போல – நான்
இதழ்சேர வரும்போது உதடுஒட்டாத குறள்போல – நீ
தள்ளியா நிற்பது? விடையாட வேண்டும் வாடி என் கண்ணே
விடிவெள்ளி கண்ணயரும் முன்னே

8. புதுக்கவிதைக் காலம் -1
ஏப்ரல் சூரியன்
டீசல் புகை
பேருந்து நெரிசல்
அலுவலக எரிச்சல்
இவையெதிலும் வாடாமல்
பத்திரமாய் வைத்திருக்கிறேன்
உனக்குத் தெரியாமல் உதிர்ந்து
யாருக்கும் தெரியாமல் நான் கவர்ந்த
உன் கருங்கூந்தற் சிறுபூவை

9. புதுக்கவிதைக் காலம் – 2
உன்வீட்டு
ஆன்ட்டனாவிலும்
என்வீட்டு
நைலான் கொடியிலும்
தனித்தனியே காயும்
நேற்று
ஊருக்கு வெளியே நாம்
ஒன்றாய்
அழுக்குச் செய்த உள்ளாடைகள்

வைரமுத்து

02 Feb 10 இலக்கியம்

களத்தில்
நிற்கிறேன்…

என்
இலக்கியத்தில்
அழகில்லை
என்கிறாய்.

தோரணம்
கட்டும்
தொழிலோ
எனக்கு?

வாளில்
அழகு தேடாதே
கூர்மை பார்..!

- காசி ஆனந்தன்

02 Feb 10 மனிதன்

இவன்
பசுவின் பாலைக்
கறந்தால்

‘பசு பால் தரும்’
என்கிறான்.

காகம்
இவன் வடையை
எடுத்தால்
‘காகம்
வடையைத் திருடிற்று’
என்கிறான்.

இப்படியாக
மனிதன்…

- காசி ஆனந்தன்